Friday, April 1, 2011

பாகம் - 14

ஸ்வேதா வீட்டிற்கு வந்தாள்.

யாரிடமும் எதுவும் பேசாமல் தன் அண்ணன் அறையில் அமர்ந்து "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதிக் கொண்டிருந்தாள்.

இரவு பத்து மணிக்கு ஸ்வேதாவின் தங்கை அவள் அம்மா மொபைலை ஸ்வேதாவிடம் நீட்டினாள்.

"ஜெயா லைன்ல இருக்கா". சொல்லிவிட்டு மொபைலை அவள் கையில் கொடுத்துவிட்டு சென்று விட்டாள்.

ஜெயா ஸ்வேதாவிடம் பேசினாள்.

"உன் மொபைல் எதுக்குடி சுவிட்ச் ஆப்ல இருக்கு?". கேட்டாள்.

ஸ்வேதா அழுதாள்.        

"சாயந்தரத்துல இருந்து மனசில ஏதோ உறுத்திட்டே இருந்துது. காலைல வீட்டு வாசல்ல நீ உக்காந்திருந்தத நினைக்கும் போது ஏதோ தப்பா நடக்குதுன்னு நினச்சு ரொம்ப நேரமா உன் நம்பருக்கு ட்ரை பண்ணிட்டே இருந்தேன். மொபைல் ஆப் ஆகியே இருந்துது. அதான் சித்தி நம்பருக்கு கூப்டேன். 

என்னடி ஆச்சு உனக்கு?"

ஸ்வேதா அக்காவிடம் அன்று மாலை வரை நடந்த அனைத்தையும் சொல்லி அழுதாள். 

ஆனால் ராகுல் மீது தவறே இல்லாததுபோல் பேசினாள். 

தன் கணவனை வீட்டில் உள்ளவர்கள் குறைவாக நினைத்துவிட கூடாதென்று நினைத்தாளோ? இந்த நினைப்புக்கு அவன் தகுதியானவன் தானா?

"அவனை சென்டிமென்ட்டா பேசி வீட்ட விட்டு வெளில விடாம வச்சிருக்காங்கடி. செத்து போயிரலாமான்னு தோனுதுடி". ஸ்வேதா மருந்து வாங்கி வைத்திருப்பதை சொல்லி அழுதாள்.
"உனக்கென்ன பைத்தியமா? இதென்னமோ விளையாட்டுத்தனமா இருக்கு. நீ உன் வாழ்க்கைக்காக போராடினா கூட நான் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன். ஆனா சூசைட் அது, இதுன்னு ஏதாவது பண்ணினா உன்ன திரும்பி கூட பாக்க மாட்டேன். 

மரியாதையா அந்த ரேட் கில்லர எடுத்து வெளில போடு. 

அவன் வீட்ல மட்டும் இல்ல. நம்ம வீட்லயும் நிறைய பிரச்சனை ஆகும். அத எப்படி சமாளிக்கிறதுன்னு யோசி. அத விட்டுட்டு லூசு மாதிரி எதுவும் யோசிச்சிட்டு இருக்காத.

அவனோட வீட்ல பேசி சம்மதம் வாங்க வேண்டியது அவனோட பொறுப்பு. அதுல நீ தலையிடாத.

இந்த நேரத்துல ரொம்ப நேரம் பேசினா வீட்ல டவுட் வரும். நான் வைக்கிறேன். எல்லாம் நேர்ல பேசலாம்".

போன் துண்டிக்கப்பட்டது.

ஸ்வேதாவிற்கு மூச்சு திணறியது. மனதில் இருக்கும் பாரம் அவளை சரியாக சுவாசிக்க விடவில்லை. அவள் சாப்பிடும் எதுவும் உள்ளே இறங்குவதும் இல்லை.

இரண்டு நாட்களுக்குப் பின் அம்மா அவளிடம் கேட்டாள்.

"உனக்கு என்னதான் பிரச்சனை? மூச்சு விட கூட ஏன் இப்படி திணர்ற? ஒழுங்கா சாப்டுறது இல்ல. சாப்டா உடனே வாமிட் பண்ணிற. உன் மனசில அப்படி என்னதான் இருக்கு?".

ஸ்வேதா பதில் எதுவும் சொல்லவில்லை.

என்றும் இல்லாத விசேஷமாய் அன்று அலுவகலம் கிளம்பியதும் அம்மாவை தன்னுடன் பஸ் ஸ்டாப் வரும்படி அழைத்தாள்.

அம்மா சென்றாள். ஸ்வேதா பஸ் ஸ்டாப்பில் கண்கலங்கி நின்றாள்.

"எல்லாத்தையும் ஏன் இப்படி மனசிலேயே வச்சு கஷ்டபடுற? பேசாம உன்ன கவுன்சிலிங் கூட்டிட்டு போலாமான்னு பாக்குறேன். அப்போதான் நீ சரியா வருவ". அம்மா சொன்னாள்.

ஸ்வேதா கண்களில் தேங்கிய கண்ணீரை அம்மாவிடமிருந்து மறைக்க வேறு பக்கமாக திரும்பி நின்றாள்.

அம்மா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.       

அன்று இரவு ஸ்வேதா மொபைல் கான்பரன்ஸில் மீண்டும் நண்பர்களோடு இணைந்தாள்.

ஸ்வேதா தன் நிலையை சொல்லி புலம்பினாள்.

"நான் இப்போ என்னடா பண்றது? எனக்கென்னவோ ராகுல் வீட்ட விட்டு வெளில வருவான்னு நம்பிக்கையே இல்லடா".

"ஒரு மாசத்துக்கு மேலல்லாம் ஒரு பையனால வீட்ல இருக்க முடியாது ஸ்வேதா. இப்போ ஒரு வாரம் தான ஆயிருக்கு. ஒரு மாசம் வரைக்கும் வெயிட் பண்ணலாம்". ஜேக்கப் சொன்னான்.

"அதுக்கப்பறமும் வரலைனா?". ஸ்வேதா கேட்டாள்.

"கண்டிப்பா வருவான். அதெப்படி வெளில வராம இருக்க முடியும்? வேலைக்காகவாது வந்துதான ஆகணும்". சிவா சொன்னான்.

"அவனுக்கு ரெண்டு மாசம்தான் நான் டைம் கொடுப்பேன். அதுக்குள்ளே அவன் உன்ன தேடி வரலைனா உங்க பிரச்சனைல நான் தலையிடவே மாட்டேன். அதுக்கப்பறம் அவன் உன்ன மறந்துற வேண்டியதான்". ராஜா கோவமாய் சொன்னான்.

"என்னடா இப்படி சொல்ற?". ஸ்வேதா நண்பனைக் கேட்டாள்.

"இங்க பாருடா ஜேக்கப். இவ நிலமைய புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறா. ராகுல் எப்போ அவன் வீட்டுக்கு கிளம்பினானோ அப்பவே மனசு மாறிட்டான்.

வீட்டுக்கு தனியா போயிராத. நீ போகும் போது நானும் வர்றேன்னு சொல்லிருந்தேன். அன்னைக்கு அவன் கிளம்பினப்ப கூட கேட்டேன்டா. நானும் வரவான்னு. அவன் வேணாம்னு சொல்லிட்டான். அன்னைக்கு அவன் எப்படி பயந்துட்டு பேசினான் தெரியுமா. அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன். இப்படிதான் ஆகும்னு.

ஆனா இவ இருக்காளே. ஐயோ.. ரெண்டு நாளைக்கு முன்னாடி என்ன ரொம்ப பயமுறுத்திட்டா. அம்மாவுக்கு லெட்டர் எழுதிட்டு இருக்கேன்னு சொல்றா. அழவும் மாட்டேங்கிறா. தல சுத்துதுன்னு சொல்றா. என்னென்னவோ பேசுறா. நான் உண்மையிலேயே ரொம்ப பயந்துட்டேன் ஜேக்கப்.

இவளுக்காக ஒரு பிளான் போட்டு கொடுத்தேன். அதுவும் வொர்க் அவுட் ஆகல.

இன்னைக்கு காலைல நாலு மணிக்கு எந்திரிச்சு உக்காந்து யோசிச்சிட்டு இருக்கேன். இந்த புள்ள இப்படி புலம்பிட்டு அலையிறாலே. இவளுக்கு என்ன பண்ணலாம்னு.

நீயே சொல்லுடா. இந்த பிரச்னைக்கு என்ன பண்றதுன்னு?". ராஜா ஜேக்கப்பிடம் கேட்டான்.

ஜேக்கப் யோசித்தான்.

"நாம அதிரடியா என்ன முடிவு வேணும்னாலும் எடுக்கலாம். ஆனா ராகுல் குடும்பம் ரொம்ப அமைதியான குடும்பம். எந்த வம்பு, தும்புக்கும் போக மாட்டாங்க. அதனாலதான் யோசிக்கிறேன். இப்போ அவங்களும் பிரச்சன பண்றவங்களா இருந்தா நாம என்ன வேணாலும் பண்ணலாம்". ஜேக்கப் சொன்னான்.

"என்னால ராகுல் வீட்ல போய் பேச முடியும். ராகுல் அப்பாட்ட நிறைய கேள்வி கேக்க வேண்டி இருக்கு. ஆனா நான் அப்படி கேட்டுட்டேன்னா அதுக்கப்பறம் அவரு உயிரோட இருக்க மாட்டாரு. அதெல்லாம் தாங்கிக்கிற சக்தி அவருக்கு கிடையாது. அதான் அமைதியா இருக்கேன்.

ஆனா ராகுல் கிட்ட நிறைய கேக்க வேண்டி இருக்கு. அவன் சென்னை வரட்டும். நான் பேசிக்கிறேன்". ராஜா சொன்னான்.

"அப்படி என்னடா கேக்க போற?". ஸ்வேதா புரியாமல் கேட்டாள்.

"அத உன்கிட்ட சொல்ல முடியாது. அவங்கிட்டதான் கேக்க முடியும்.

அவன் தப்பு பண்ணிட்டான்டி. மத்தவங்க கதை வேற. உங்க கதை வேற.

இதே பிரச்சன வேற யாருக்காவது வந்துருந்தா நான் தலையிட்டுருக்கவே மாட்டேன். உன் இடத்துல வேற ஒரு பொண்ணு இருந்துருந்தா அவனுக்காக இப்படி வருத்தபட்டுருக்க மாட்டா. போய் தொலன்னு விட்டுட்டு போயிருப்பா.

ஆனா ராகுல் இடத்துல வேற ஒரு பைய்யன் இருந்துருந்தா உன்ன வச்சு தாங்கிருப்பான்டி. உன்ன இப்படி விட்டுட்டு போயிருக்க மாட்டான். உன்ன ராகுல் மிஸ் பண்றான் ஸ்வேதா. அவன் ஒரு முட்டாள். 

நீ நல்லவடி. உன்ன போய் இப்படி பண்ணிட்டானே. 

ஆனா ஒன்னு. உனக்கு அவன உன் பிடில வைக்க தெரியல". ராஜா சொன்னான். 

"என்னடா என் பிடில வைக்க தெரியல?". ஸ்வேதா கேட்டாள்.

"அவனை உன் மேல பைத்தியமாக்கிருக்க வேண்டாமா. நீ அவனை ரொம்ப லூசா விட்டுட்ட".

"நான் ஏன்டா அவன என் பிடில வைக்கணும்? அந்த அவசியம் எனக்கு இல்ல. ஆனா அவன் என்மேல பைத்தியமா இருக்கேன்னு சொன்னானேடா". ஸ்வேதா கலங்கிபோய் சொன்னாள்.

"சரி விடு. அவன் என்கிட்ட ஒரு மணி நேரம் பேசினா கூட போதும். அவனை நான் தெளிய வச்சிருவேன். அவன் சென்னை வரட்டும். 

சரி. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க பேசுங்க. நான் கிளம்புறேன்". ராஜா விடை பெற்றான். 

ஜேக்கப், சிவா இருவரும் தொடர்பில் இருந்தனர். 

"சிவா நீ என்ன நினைக்கிற?". ஜேக்கப் கேட்டான். 

"ராஜா சொன்னது சரிதான். ராகுல்கிட்ட கொஞ்சம் தனியா பேசினா போதும். எல்லாம் சரி ஆயிரும். அவன் எனக்காவது போன் பண்ணலாம்ல?". சிவா சொன்னான்.

சிறு வயதிலிருந்தே ராகுலுக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் சிவாவிடம் தானே சொல்லுவான். இப்போது ஒரே ஊரில் இருந்து கொண்டு அவனை கூட தொடர்பு கொள்ளவில்லையே என்ற வருத்தத்துடன் சிவா பேசினான்.

"அவனதான் ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சிருக்காங்களே. அப்பறம் எப்படி உன்ன காண்டக்ட் பண்ணுவான்". ஸ்வேதா சொன்னாள்.  

"சும்மா ஹவுஸ் அரெஸ்ட்டுனு சொல்லாத. கேக்கவே அசிங்கமா இருக்கு. இவன் என்ன பொட்ட புள்ளயா? வீட்ல அடச்சு வைக்க? இவன் ஏன் இப்படி பண்றான்னே புரியல.

அவன் தெளிவா இருந்தா நாம என்ன வேணாலும் பண்ணலாம். நம்ம ஊர் கவுன்சிலர் கிட்ட பேசி, அவர் மூலமா அவன் குடும்பத்த ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு வரலாம். ஆனா இவன் தெளிவா இல்லையே. அங்க வந்து என் குடும்பம் தான் முக்கியம். நான் பண்ணது தப்புதான். ஆனா இப்போ இவள கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா நம்மளால ஒன்னும் பண்ண முடியாது. அவன் வீட்ல உள்ளவங்களும் காசு கொடுத்து கேஸ் எதுவும் இல்லாம பண்ணிருவாங்க. அப்பறம் இவ அவன கல்யாணம் பண்ணியும் வேஸ்ட் தான்.

அதனால நாம இப்போ கொஞ்சம் பொறுமையாதான் இருக்கனும். அதிரடியா எதுவும் யோசிக்க வேண்டாம்". ஜேக்கப் சொன்னான். 

"என்னால முடியலடா. டெய்லி அம்மா என்கிட்ட கேக்குறாங்க. ஏன் ஒரு மாதிரியா இருக்க? உனக்கு என்னதான் பிரச்சனைன்னு. என்னால நிம்மதியா மூச்சு கூட விட முடியலடா. ரொம்ப கஷ்டமா இருக்கு. பேசாம எங்க வீட்ல சொல்லிறவா?".

"அந்த தப்ப மட்டும் பண்ணிராத. உங்க வீட்ல சப்போர்ட் பண்ணினா பிரச்சனை இல்ல. அவங்களும் முடியாதுன்னு பிரச்சன பண்ணினா ரொம்ப கஷ்டமாயிரும்.  உனக்கு கஷ்டமா இருந்த உடனே எனக்கு போன் பண்ணு. என்கிட்ட சொல்லாம உன் வீட்ல இத பத்தி பேசிறாத. புரியுதா?".

"சரிடா".

பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்வேதாவின் அம்மா வெளியே வந்தாள்.

"யார்கிட்ட இவ்ளோ நேரமா பேசிட்டு இருக்க?". கேட்டாள்.

"பிரண்ட்ஸ் கிட்ட தான். இங்க ஒரு பெரிய கதை போயிட்டு இருக்கு". ஸ்வேதா விளையாட்டாய் சொன்னாள்.

"நீ என் கதையை பெரிய கதையா ஆக்கிருவ போலருக்கு". அம்மா சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

ஸ்வேதா நண்பர்களிடம் சொன்னாள்.

"அம்மாவுக்கு என்மேல சந்தேகம் வந்துருச்சு. இதுவும் ஒரு விதத்துல நல்லதுதான். சந்தேகத்தோட இருந்தாதான் வீட்ல விஷயம் தெரியும் போது அவங்களுக்கு அது பெரிய அதிர்ச்சியா இருக்காது".

"அதுவும் சரிதான். சரி. சிவா, நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. நானும் கிளம்புறேன்". ஜேக்கப் விடை பெற்றான்.

"ஸ்வேதா உனக்கு மனசில என்ன தோணுது? ராகுல் என்ன நினைப்பான்னு எனக்கு தெரியும். ஆனா என்ன விட உனக்கு நல்லா தெரிஞ்சிருக்குமே. நீ என்ன நினைக்கிற?". சிவா கேட்டான்.

"எனக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு. ஆனா இல்ல".

"என்ன நீ எஸ். ஜே. சூர்யா மாதிரி இப்படி பதில் சொல்ற?".

ஸ்வேதா சிரித்தாள்.

"அவன் மேல எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கோ அந்த அளவுக்கு நம்பிக்க இல்லாமையும் இருக்கு. வீட்ல இருக்கும் போது கண்டிப்பா அவன் மனசு மாறிருப்பான். ஆனா வெளில வந்தா கண்டிப்பா என்ன தேடி வருவான்". ஸ்வேதா சொன்னாள்.

"கரெக்ட். நானும் இதையேதான் நினச்சேன். ஆமா கிட்னேப்பிங் எப்போ நடந்துது?".

இதை கேட்டதும் ஸ்வேதா சிரித்து விட்டாள்.

"ஹே சீரியஸா பேசும் போது ஏன் இப்படி காமெடி பண்ணிட்டு இருக்க?". சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே கேட்டாள்.

சிவாவும் சிரித்தான்.

"ஆமா. சொல்லாம கொள்ளாம வீடு வந்து தூக்கிட்டு போயிட்டாங்க. அப்பறம் வேற எப்படி கேக்குறது?".

"ஒரு கரப்பான் பூச்சிய தூக்கினா கூட அது கை, கால ஆட்டும். ஆனா இவன் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் பண்ணாம எவ்ளோ அமைதியா, அடங்கி போயிருக்கான் பாத்தியா". ஸ்வேதா சொன்னாள்.

"அவன் வீட்ட விட்டு வெளில வற ஒரு வழி இருக்கு".

"என்ன?". ஸ்வேதா ஆர்வமாய் கேட்டாள்.

"அவங்களே மாதிரி நாமலும் அவனை வெளில கடத்திட்டு வரனும். பிரண்ட்ஸ் நாலு பேர் சேர்ந்து ஒரு சுமோ ஒன்னு புடிச்சு அவங்க வீட்டுக்கு போகனும். இதுல முக்கியமான விஷயம் என்னென்னா யாரும் வண்டிக்குள்ள இருக்க கூடாது. நாலு பேரும் டோருக்கு வெளில நிக்கதான் செய்யனும், எல்லாரோட கைலையும் ஒரு அருவாள் இருக்கனும். ராகுல் வீட்டுக்கு போறோம். அவனை தூக்கிட்டு வந்து வண்டில ஏத்துறோம். நிக்காம உடனே அங்க இருந்து கிளம்பி உன் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறோம். மறந்து கூட அவன் வீட்டு முன்னாடி ரெண்டு நிமிஷம் நின்னுர கூடாது. அப்பறம் அவன் மனசு மாறிருவான்". சிவா அழகாக நகைச்சுவையாய் ஒரு கதை சொன்னான்.

சிவா சொல்வதை எல்லாம் கற்பனை செய்தபடி ஸ்வேதா சிரித்துக் கொண்டிருந்தாள்.

"நீ ஒன்னும் கவலை படாத ஸ்வேதா. அவன் உன்ன தேடி வருவான்.

திங்கட் கிழமை அவன கூட்டிட்டு போனாங்க. அதுக்கு முந்தின நாள் நைட் கூட என்கிட்ட சொன்னான். என்ன ஆனாலும் சரி. ஸ்வதாவ நான் விடுறதா இல்ல. வீட்ல ஒத்துக்கலனாலும் பரவால்ல, நான் அவளை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னான். ஒன்னு வேணும்னா இன்னொன்ன இழந்துதான் ஆகனும்னு என்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கான். அவன் அப்பாவுக்கு ஏதாவது ஆனாலும் கூட பரவால்ல. அதுக்காக அவளை விட மாட்டேன்னு  சொன்னான். அதனால நீ தைரியமா இரு". சிவா ஸ்வேதாவிற்கு ஆறுதல் சொன்னான்.

நண்பர்களிடம் பேசியது ஸ்வேதாவிற்கு கொஞ்சம் மன ஆறுதலைத் தந்தது.

ஸ்வேதா வீட்டிற்குள் சென்றாள்.

அங்கே ஸ்வேதாவின் அம்மா மதுரையில் இருக்கும் அவள் அண்ணன் மகள் சீமந்தத்திற்கு போவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள்.

"எப்போ மதுரை போறீங்க?". ஸ்வேதா அம்மாவிடம் கேட்டாள்.

"ஏன்? நீ எங்கயாவது போறதுக்கு பிளான் பண்ணிருக்கியா?". அம்மா கேட்டாள். 

"அவனே இல்ல. அப்பறம் நான் யார்கூட போறதுக்கு பிளான் பண்றது". மனதிற்குள் நினைத்துக் கொண்டு அம்மாவிடம் சொன்னாள் "நான் எங்க போக போறேன்?".

அம்மா பதில் சொல்லவில்லை. 

அன்று இரவு அம்மா, ஸ்வேதாவின் தங்கையிடம் தங்கம், வெள்ளியின் விலை உயர்வைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள். 

"இப்போ வெள்ளி கூட வாங்க முடியாது போலருக்கே". அம்மா சொன்னாள். 

ஸ்வேதா அவள் விரலில் உள்ள மோதிரத்தைப் பார்த்தாள். அது ராகுல் அவள் விரலில் போட்ட வெள்ளி மோதிரம். ஸ்வேதா மனதில் என்ன நினைத்தாலோ தெரியவில்லை. அவள் விரலைக் காட்டி அம்மாவிடம் சொன்னாள். 

"இது கூட வெள்ளிதான்".

"வெள்ளியா? நான் இது மெட்டல்னு நினச்சிட்டு இருந்தேன். நீ எப்போ வெள்ளில மோதிரம் வாங்கின? என்கிட்ட ஏன் சொல்லல? எங்க வாங்கின?". அம்மா கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.

"ஐயோ. நானே வாய் கொடுத்து மாட்டிக்கிட்டேனே". ஸ்வேதா மனதிற்குள் நினைத்தாள்.

ஸ்வேதா ஏதோ ஒரு கடையின் பெயரைச் சொல்லி அங்கே வாங்கினேன் என்று பொய் சொன்னாள். 

"நீ என்கிட்ட நிறைய மறைக்கிற". சொல்லிவிட்டு அம்மா அவளைப் பார்த்து முறைத்தாள்.

பிரச்சனை இதோடு முடியவில்லை. மறுநாள் காலையும் தொடர்ந்தது. 

ஸ்வேதா டிவியில் பாட்டு பார்த்துக்கொண்டே அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். 

அம்மா திட்டினாள்.

"படத்துல மட்டும் தான் ஓடிப் போறவங்க ஒரே பாட்டுல கல்யாணமும் பண்ணிக்கிட்டு, வாழ்க்கையிலையும் முன்னேறிருவாங்க". 

ஸ்வேதா டிவி சேனலை மாற்றினாள். அங்கேயும் ஒரு காதல் பாட்டு தான் ஓடியது.

"வெளிநாட்டுகாரி துணி துவைக்கிரவனை காதலிக்கிறா. நிஜத்தில இப்படியெல்லாம் நடக்குமா?". அம்மா நிறுத்தாமல் திட்டினாள்.

ஸ்வேதா டிவியை ஆப் பண்ணிவிட்டு "நமச்சிவாய" பாடலை போட்டாள்.

அம்மா அமைதியானாள். 

மறுநாள் ராஜா ஸ்வேதாவிடம் பேசினான்.

"சாரி டி. நேத்து கொஞ்சம் வேலை இருந்துது. அதான் கிளம்பிட்டேன்". சொன்னான்.

"பரவால்லடா. ராஜா, எனக்கென்னவோ கல்யாணத்துக்கு அப்பறம் என் புருஷன என்கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி இருக்குடா. நான் அவனை என் புருஷனாதான நினச்சுட்டு இருந்தேன். அவனும் என்ன பொண்டாட்டின்னு தான்டா கூப்டுவான். இப்போ வீட்டுக்கு போனப்பறம் எல்லாம் மறந்துட்டானா?".

"இந்த மாதிரி நினைப்பு தான்டி உங்க மனசில இருக்கனும். உனக்கு இருக்கு. ஆனா அவன் என்ன நினைக்கிறான்னு தெரியலையே. 

ஸ்வேதா, நீ மணி அண்ணாட்ட பேசுறத மட்டும் நிருத்திறாத. அவங்க மூலமாதான் ராகுல் வீட்ல என்ன நடக்குதுன்னு நம்மளால தெரிஞ்சுக்க முடியும். அன்னைக்கு அவங்க கால் பண்ணப்ப கட் பண்ணி விட்டல்ல. அதுக்கு அவங்க கிட்ட சாரி கேட்டுரு".

"கேக்குறேன்டா. ராஜா, நான் இந்த பிரச்சனைய என் தாத்தாட்ட சொல்லிரலாம்னு நினைக்கிறேன். நான் மொதல்ல தாத்தா வீட்டுக்கு போகனும். நேரம் பாத்து தாத்தாட்ட இத பத்தி பேசனும்". 

"உன் இஷ்டம். இதையும் மணி அண்ணாட்ட சொல்லிரு. விஷயம் ராகுல் வீட்டுக்கு போயிரும்".

ஸ்வேதா மணியிடம் பேசினாள்.

"அண்ணா. அன்னைக்கு நான் போனை கட் பண்ணது தப்புதான். நீங்க அத மனசில வச்சுக்காதிங்க. நான் அன்னைக்கு இருந்த மன நிலைமைல எனக்கு உங்ககிட்ட பேச பிடிக்கல. அதான் கட் பண்ணேன்".

"அது பரவால்ல. ஆனா நீ போனை கட் பண்ணதுக்கு ராகுலோட அப்பா என்ன சொன்னாங்க தெரியுமா?".

"அப்போ நீங்க போன் பண்ணப்ப ராகுல் வீட்லதான் இருந்திங்களா?".

"ஆமா. ராகுல் அப்பா பக்கத்துல இருந்துதான் போன் பண்ணேன். 

அவர்கிட்ட நான் எல்லாத்தையும் சொன்னேன்மா. தப்பு முழுசும் நம்ம பையன்கிட்ட தான் இருக்கு. அந்த பொண்ண நாம தப்பு சொல்ல கூடாதுன்னு சொன்னேன். அதுக்கு அவரு நம்ம வீட்டு பையன எப்படி தப்பு சொல்ல முடியும். அந்த பொண்ணு சாதாரண பொண்ணு இல்லன்னு சொல்றாரு. 

ராகுலும் இவ ஏன் போனை கட் பண்றா. நீங்க என்ன சொல்றிங்கன்னு கேக்கலாம்லன்னு கோவபடுறான். என் இடத்துல இருந்து நீங்க அவகிட்ட என்ன பிரச்சனைன்னு சொல்லிருங்கனு சொல்றான்....".

ஸ்வேதா ராகுலை காதலித்தாளா? இல்லை மணியைக் காதலித்தாளா? காதலித்தவன் தானே அவளுக்கு பதில் சொல்ல வேண்டும். இதில் எங்கிருந்து நுழைந்தார் இந்த மூன்றாவது மனிதர் மணி?

"....நீ ஏன் இவனபோய் லவ் பண்ண? உங்க பிரண்ட்ஸ்ல வேற யாரையாவது நீ லவ் பண்ணிருந்தா இந்நேரம் உன்ன கல்யாணம் பண்ணிருப்பாங்க. இவன நம்பி ஏமாந்துட்டியே. இவன் வீட்ல நடிக்கிறான்மா. அம்மா, அப்பா என்ன சொன்னாலும் தலையாட்டுறான். அவன் அப்பாகிட்ட சொல்லலாம்ல.தப்பெல்லாம் என் மேலதான்னு சொல்லி தைரியமா பேசலாம்ல. இவன்தான் பேச மாட்டேங்கிறானே.

இவன நம்பி நீ ஓடி வந்தாலும், உங்க கல்யாணத்துக்கு அப்பறம் அவன் வீட்ல இருந்து யாரவது வந்து கூப்டா இவன் உன்ன விட்டுட்டு அவங்க கூட வந்துருவான். அப்போ நீ என்ன பண்ணுவ? உன் வாழ்க்கைய நீதான் காப்பாத்திக்கனும்". மணி மனதில் உள்ளதை பேசி முடித்தார்.

"நீங்க சொல்றதெல்லாம் சரிதான் அண்ணா. ஆனா எல்லாம் காலம் கடந்து போச்சு. என்னால இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்க முடியாது. நானும் அந்த ஊர்ல பிறந்த பொண்ணுதான. மனசில நினச்சவன கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறேன். அவனே மாதிரி என்னால பிரச்சனைய பாத்து பயந்து ஓட முடியாது. நான் முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணி பாப்பேன். 

என்னால தனியா போராட முடியல. அதனால நான் என் தாத்தா கிட்ட விஷயத்த சொல்ல போறேன். இனி பெரியவங்க பேசி முடிவு பண்ணட்டும்.இத ராகுல் கிட்ட சொல்லிருங்க".

அன்று இரவு ஸ்வேதா ஊரில் இருக்கும் அவள் பாட்டியிடம் பேசினாள். 

"பாட்டி, எனக்கு வேலைக்கு போக பிடிக்கல. வேலைய விட்டுட்டு கொஞ்ச நாள் உங்க கூட ஊர்ல இருக்கலாம்னு நினைக்கிறேன். நான் அங்க வரவா?". பாட்டியிடம் கேட்டாள்.

"தாராளமா வா. ஆனா உன் மாமா பொண்ணு சீமந்தம் முடிஞ்சதும் வா. விசேஷத்துக்கு நாங்கல்லாம் மதுரை வரோம். அதுக்கப்பறம் வரியா?".

"ஐயோ. அவ்ளோ சீக்கிரமா வர முடியாது. நான் வர இன்னும் ஒரு மாசம் ஆகும்".

"சரிம்மா. சீக்கிரமா வா". 

மறுநாள் ராகுலின் நண்பன் கணேஷ் ஸ்வேதாவிடம் பேசினான். 

"ஸ்வேதா, நேத்து மணி எனக்கு போன் பண்ணிருந்தாரு".

"மணி அண்ணாவா? உங்க நம்பர் அவங்களுக்கு எப்படி தெரியும்? என்ன சொன்னாங்க?".

மணி கணேஷுக்கு போன் பண்ண என்ன அவசியம் வந்தது? ஸ்வேதாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

"நீங்க ஸ்வேதாகிட்ட பேசினிங்கலானு கேட்டாரு. அவ எப்படி இருக்கான்னு கேட்டாரு". கணேஷ் சொன்னான்.

ஸ்வேதாவிற்கு விஷயம் புரிந்தது. அவள் உயிரோடுதான் இருக்கிறாளா இல்லையா என்பதை அறிந்துகொள்ள ராகுல் தான் மணியிடம் சொல்லி கணேஷுக்கு போன் பண்ண சொல்லியிருக்க வேண்டும்.             

"நீங்க என்ன சொன்னிங்க?". கேட்டாள். 

"எனக்கு தெரியாதுன்னு சொன்னேன்.அவளை பத்தி தெரிஞ்சு என்ன பண்ண போறிங்கன்னு கேட்டுரலாமானு தோணிச்சு எனக்கு. உன்ன பத்தி கேட்டு அவங்க என்ன பண்ண போறாங்க?". கணேஷ் கோவமாய் கேட்டான்.

"ராகுல் கேக்க சொல்லிருப்பான். அவங்க கேட்டுருக்காங்க. அவ்ளோதான் அண்ணா".

ராகுல் என்னதான் நினைக்கிறான் என்பது யாருக்கும் புரியவில்லை. அவள் வேண்டாம் என்று நினைத்தால், அவள் உயிரோடு இருந்தால் என்ன? இல்லை செத்தால்தான் அவனுக்கென்ன?   

சனிக்கிழமை இரவு அம்மா சொன்னாள். 

"நாளைக்கு சித்தி வீட்டுக்கு போறோம்".

ஸ்வேதாவிற்கு அங்கே செல்ல மனமில்லை. அங்கே சென்றால் அசாதாரணமாக  காணப்படுவோம் என்று நினைத்தாளோ  என்னவோ. 

"நான் கண்டிப்பா வரணுமா? எனக்கு இஷ்டம் இல்லையே". ஸ்வேதா சொன்னாள். 

"போயிட்டு சீக்கிரமா வந்துரலாம்". அம்மா சொன்னாள். 

மறுநாள் சித்தி வீட்டில் ஸ்வேதாவிற்கு உபசரிப்பெல்லாம் பலமாக இருந்தது. அதை சாப்பிடு, இதை சாப்பிடு என்று அன்பு தொல்லைகளும் அதிகமாக இருந்தது. 

ஏதோ பேசிக்கொண்டிருக்கும் பொழுது சித்தி சொன்னாள். 

"நீ கலரா, அழகா இருக்கல்ல. நாலு பசங்க உன்ன பாக்கத்தான் செய்வாங்க. நல்ல சுத்தி போடு". என்றாள்.

இதென்ன சித்தி என்றும் இல்லாத நாளாக இன்று இப்படி பேசுகிறாள்?

மதிய உணவு முடிந்ததும் ஹாலில் ஸ்வேதா, தங்கை, தம்பி, சித்தி மகள்கள் இரண்டு பேர் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். 

அப்போது சித்தி ஹாலிற்கு வந்து "ஸ்வேதா கொஞ்சம் இங்க வா" என்று படுக்கை அறைக்கு அழைத்தாள்.

ஸ்வேதா சென்றாள்.

அங்கே ஸ்வேதாவின் அம்மா படுக்கையில் சரிந்து படுத்திருந்தாள்.

சித்தி ஸ்வேதாவை அணைப்பது போல் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு நெருக்கமாக நின்றாள். சித்தி உடம்பெல்லாம் நடுங்கியது. 

"ஸ்வேதா, உன்கிட்ட ஒன்னு கேப்போம், மறைக்காம பதில் சொல்லுமா". சித்தி சொன்னாள். 

"என்ன சித்தி?". ஸ்வேதா புரியாமல் கேட்டாள். 

"நம்ம ஊர்ல இருந்து சித்தப்பாவுக்கு ஒரு போன் வந்துது. நீ ஒரு ஆசாரி பையன காதலிக்கிறதா சொன்னாங்க. அவன் இல்லைனா செத்து போயிருவேன்னு சொன்னதா சொன்னாங்க. இது உண்மையா?". கேட்கும் பொழுது சித்தி உடம்பில் நடுக்கம் அதிகமானது.

ஸ்வேதா அதிர்ந்துபோய் சித்தியைப் பார்த்தாள்.

ஸ்வேதா வீட்டிற்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது? எப்போது தெரிந்தது?



உண்மைக் கதை தொடரும்...



      

    

0 comments: